×

கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பாலம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. சுமார் 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த பாலம் சிதிலம் அடைந்தது. இதனால் ரூ.550 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கடலில் 2.8 கிமீ நீளத்திற்கு கட்டப்படுகிறது. பழைய பாலம் போலவே மைய பகுதி வழியாக பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் புதிய பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாலத்தின் மையப் பகுதியில் 72.5 மீட்டர் நீளமுள்ள லிப்டிங் கிர்டர் (தூக்குப்பாலம்) நிறுவப்படுகிறது. இது செங்குத்தாக மின் சக்தி மூலம் திறக்கப்பட்டு 17 மீட்டர் உயரம் வரை சென்று கப்பல்களுக்கு வழிவிடும்.

இந்த பாலத்திற்காக கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன. எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளம் மற்றும் தூண்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மைய பகுதியில் பொருத்தப்பட உள்ள தூக்குப்பாலம்(லிப்டிங் கிர்டர்) பகுதி, கடலில் இறக்கப்பட்டு மெதுவாக நகர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 200மீ தொலைவு நகர்த்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 228 மீ தொலைவில் நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. பாலத்தில் தற்போது 1.5 கிமீ நீளத்திற்கு மின் மயமாக்கல் பணிகள் முடிந்துவிட்டன. அதில் சரக்கு ரயில் சோதனை ஓட்டமும் முடிந்துவிட்டது. மீதமுள்ள 0.6 கி.மீ. ரயில் பாதையில் மின்மயமாக்கல், கிர்டர்கள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, இந்த ஆண்டு இறுதியில் புதிய பாலம் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pompon ,bridge ,Madurai ,Bambon ,Southern Railway ,Ramanathapuram district ,Bombon New Rail Bridge ,Dinakaran ,
× RELATED திருவரம்பு மாறப்பாடி பாலம் பகுதியில் பட்டுப்போன மரத்தை அகற்ற கோரிக்கை